மனிதம்
மலர்ந்தது!
சென்னையிலே பெருவெள்ளம்
செய்ததம்மா பெருந்துயரம் ,
தன்னலத்தை விதைத்ததால்
தான்வந்த துயரமிது !
விண்விதைத்த துளிகளால்
வீதிகளும் வீடுகளும்
மண்நனைத்து பெருகிநிற்க
மக்களுக்கோ கடுந்த்துயரே!
வீடுவாசல் இழந்தனர்,
விதிஎண்ணி புலம்பினர்,
தேடுபொருள் தொலைந்ததால்
தேவைக்காய் அழுதனர்,
ஓடிவாங்க உறுபசிக்கு
உணவுயென ஏதுமின்றி
வாடிட்ட நேரமதில்
வந்தனரே நண்பர்களே!
நேற்றுவரை மதம்பார்த்தோம்
நெஞ்சமெல்லாம் ஜாதிசொன்னோம் !
தூற்றுமொழி தானெடுத்து
தூரப்போ என்றுரைத்தோம் ;
காற்றும்மேல் பட்டாலே
கடுங்கோபம் தான்கொண்டோம்,
வேற்றுமையை பாராட்டி
வீதிதனில் கொடிபிடித்தே !
மாற்றுமொழி பகர்தற்கே
மனிதமதை உணர்வதற்கே
சாற்றுமொரு சாட்சியாய் ,
சமதர்மம் பேணுதற்கே ,
ஏற்றிவைத்த தீபத்தால்
இருப்பதை தெரிந்திடவும்
ஆற்றிதந்த வெள்ளமிது
ஆண்டவனுக்கே சொல்லிடுவோம் !
நீர்தாண்டி சோறு தந்தார்
நீள்துயரை துடைத்துநின்றார்,
கார்பதித்த கோரங்களை
கைகோர்த்து தடுக்கவந்த்தார்,
வேர்முளைத்த துயரமதில்
வேரில்லை நாமமென்றார்!
யார்வேண்டும் இனி இங்கு
எல்லோரும் ஓரினமே!
பள்ளிகளும் , கோவில்களும்
படுத்துறங்கும் இடமாக்கி ,
அள்ளிவந்த துயரங்களை
ஆற்றோடு போகவிட்டு,
நள்ளிரவு என்றாலும்
நட்போடு துணையிருந்து
வெள்ளத்தில் கரைசேர்த்த
வெகுமதியே மனிதமான்றோ !
----------- ந. ஜெயபாலன்
No comments:
Post a Comment
தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_