February 10, 2016

2015 மகாகவி பாரதியாரின் கவிதைப்போட்டி - முதல் பரிசுக்கவிதை

1.         கனவை  நனவாக்குவோம்

செந்தமிழே   ஆட்சிமொழி   அலுவல்  எல்லாம்
            செழுந்தமிழில்கோப்புகளில்   தமிழே   கொஞ்ச
நந்தமிழர்   பிறமொழியின்   கலப்பே   இன்றி
            நற்றமிழில்   பேசுகின்றார் !   கல்வி   எல்லாம்
செந்தமிழில் !   நீதிமன்ற    உரைக   ளெல்லாம்
            செழுந்தமிழில் !   வணிகம்செய்   கடைகள்  தம்மில்
நந்தமிழில்   பெயர்பலகை    வீதி   யெல்லாம்
            நமிதமிழின்    ஒலியன்றி    வேறு   யில்லை !

இறைவனுக்கு    வழிபாட்டுப்   போற்றி   யெல்லாம்
            இன்தமிழில் !   சமற்கிருத   ஒலியே   யின்றி
மறையாகத்   திருமுறைகள்   பிரபந்   தங்கள்
            மனமுருகப்   பாடுகின்றார்   கோயில்   தோறும்
நிறைவாகக்   குடமுழுக்கு   தமிழில்   செய்து
            நிலைத்தயருள்    பெறுகின்றார்   தமிழ  ரெல்லாம்
நறைதமிழைச்   செவ்வியலாய்   உலகே   ஏற்கும்
            நற்கனவை   நனவாக்கும்   செயலைச்  செய்வோம் !

வீட்டுமனை   யாகிவிட்ட    வயல்க   ளெல்லாம்
            விளைநிலமாய்   மீண்டுமிங்கே   மாற   வேண்டும்
காட்டைவெட்டிப்   பாழ்செய்த   மரங்க  ளெல்லாம்
            கண்முன்னே   மீண்டுமிங்கே   வளர  வேண்டும்
ஓட்டையாகி    மாசுபட்ட   ஓசோன்   வானம்
                                    தூய்மையாகி   மீண்டுமிங்கே   திகழ  வேண்டும்
கூட்டில்தன்   குஞ்சுகளுக்   கிரையை  ஊட்டும்
            குருவிகளை   மீண்டுமிங்கே   காண   வேண்டும் !

பண்ணிசைத்துக்    குடகுதாவி   வந்த   பொன்னி
            பாதையிலே   முளைத்ததடை   நீங்கி   யின்று
கண்ணகியின்   புகழ்மொழியும்   சிலம்பில்  காணும்
            காவிரியாள்   அழகுமுகம்   காண   வேண்டும்
கண்போன்ற   தஞ்சையிலே   நெற்ப   யிர்கள்
            கரும்பச்சைப்   பட்டைப்போல்   ஒளிர   வேண்டும்
தண்ணீரால்   சண்டையின்றி  மாநி  லங்கள்
            தகவுறவால்   இணைந்தநிலை    மலர   வேண்டும் !

மணல்பரந்து   காய்ந்திருக்கும்   ஆற்றி   லெல்லாம்
            மனம்துள்ள    நீர்துள்ளி   ஓட   வேண்டும்
குணமுள்ள   பெண்முகத்தில்   நாணம்   செய்யும்
            குங்குமம்போல்   சிவந்தவெள்ளம்   பாய   வேண்டும்
பிணவாடை   சாக்கடைநீர்   கலந்தி   டாத
            பிறழும்மீன்   கண்தெரியும்   தூய   நீராய்
மணம்வீசி   மலர்தவழ   திகழ   வேண்டும்
            மனம்விரும்பும்   இக்கனவை   நனவாய்ச்  செய்வோம் !

பட்டங்கள்   பலபெற்றும்   பணியே  யின்றிப்
            பரிதவித்தே   ஏங்குகின்ற    இளைஞர்   கூட்டம்
வெட்டியாகச்   சுற்றுகின்ற   நிலைமை   மாற
            வெறுங்கைகள்   வலிமைதனைத்   திறன்கள்   தம்மைத்
திட்டமிட்டுப்   பயன்படுத்தப்   பணிகள்   தோற்றித்
            திண்டாடல்   இல்லாத  நிலையாய்   யாகிக்
கட்டாயம்   பணிகிடைத்தே   இளைஞ   ரெல்லாம்

            கடமைசெய்யும்   கனவுதனை   நனவாய்ச்  செய்வோம் !

கவிஞர் கருமலைத்தமிழாழன்
ஓசூர்

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_